ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தவிர்க்க, ஊடகங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அண்மையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிப்பது தொடர்பாக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை தவிர்க்குமாறு அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று (ஜூன் 13) அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால், நாட்டின் பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் சமூக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன. 2019-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், செயற்கைக்கோள் தொலைக்காட்சி இணையசேவை ஒழுங்குமுறை சட்டம் 1995, மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விளம்பர விதிமுறைகள் 1978 ஆகியவற்றுக்கு எதிராக இந்த விளம்பரங்கள் உள்ளன.
எனவே, பொதுநலன் கருதி, அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
**-பிரியா**
