22 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

Published On:

| By admin

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021ன் கீழ் நடவடிக்கை எடுத்து 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 04.04.2022 அன்று 22 யூடியூப் செய்தி சேனல்கள், 3 ட்விட்டர் கணக்குகள், 1 பேஸ்புக் கணக்கு, ஒரு செய்தி வலைதளம் ஆகியவற்றை முடக்கி உத்தரவிட்டுள்ளது. முடக்கப்பட்ட இந்த யூடியூப் சேனல்களின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 260 கோடிக்கும் அதிகம் என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த சேனல்கள் வதந்திகளைப் பரப்பும் வகையிலும், தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் வெளியுறவு விதிகளை மீறும் வகையிலும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகள், ஜம்மு-காஷ்மீர் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தவறான செய்திகளை இந்தச் சேனல்கள் பரப்பி வந்தன. இந்தியாவுக்கு எதிரான சில செய்திகள் உள்ளிட்டவற்றை வெளியிட்ட சமூக ஊடகக் கணக்குகள் பாகிஸ்தானிலிருந்து ஒருங்கிணைந்து இயக்கப்பட்டது தெரியவந்தது. உக்ரைனில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் இந்த யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளை வெளியிட்டு இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளைக் குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

முடக்கப்பட்ட இந்திய யுடியூப் சேனல்கள் சில தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் பெயர்களையும், செய்தி வாசிப்பவர்களின் படங்களையும் வெளியிட்டு, உண்மையான செய்தி என்ற தோற்றம் ஏற்படும் வகையில் பார்வையாளர்களுக்குத் தவறான தகவல்களைப் பரப்பி வந்தன. தவறான செய்திகளுடன் இந்த சேனல்களின் சிறுபடங்களும், வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் இடம் பெற்றிருந்தன” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுபோன்று 2021 முதல் இதுவரை 78 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share