சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் இன்று (ஜூன் 26) சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதங்கள் கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ”சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு விரைந்து நடத்த வலியுறுத்தும் விதமாக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று அறிவித்தார்.
அதன்படி இன்று சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
அதன்பின்னர் இந்த தீர்மானம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சம வாய்ப்பு மற்றும் சம உரிமைகளை வழங்குவதன் மூலம்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக நாம் மாற இயலும்.
அந்த நோக்கத்தோடுதான், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டு வருவதற்காக இடஒதுக்கீட்டு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சமூதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதை கடைப்பிடித்து வருகிறோம்.
சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கூட பாமக உறுப்பினர் ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்தும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் சட்டம் சென்செக்ஸ் ஆக்ட் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு பெரும் பணியாகும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் ஒரு மாபெரும் பணி மக்கள் தொகை கணக்கெடுப்பு.
மக்கள்தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்த கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3ன் படி, மத்திய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால், பொது வெளியில் பரவலாக கூறப்படும் கருத்து என்னவென்றால், புள்ளிவிவர சட்டம் 2008ன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ளலாம் என்பதாகும்.
இந்த சட்டத்தின்படி, மாநில அரசுகள் சமூக, பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டப்பிரிவு 3 உட்பிரிவு ‘அ’வின் படி, இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்க முடியாது.
அதாவது 7வது அட்டவணையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு 69வது இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்த சட்டத்தின் பிரிவு 32ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948ன் கீழ், மக்கள்தொகை தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசு சேகரிக்க இயலாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பொதுவெளியில் சிலர் தவறாக புரிந்து வைத்திருக்கும்படி, 2008 புள்ளி விவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள இயலாது.
சட்டப்படி நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்பது மத்திய சட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்கீழ் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இந்த பணியை மத்திய அரசு மேற்கொண்டால்தான் முறையாக இருக்கும்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படையான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளாமல் மத்திய அரசு இன்று வரை காலம் தாழ்த்தி வருகிறது.
இதற்கு முதலில் கோவிட் பெருந்தொற்றை காரணமாக கூறினார்கள். தற்போது கோவிட் சென்று 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தன் கடமையை புறக்கணிக்கும் செயல் அல்லவா?
நாம் தொடர்ந்து கோரிக்கை வைப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்பதும்தான். இதனை வலியுறுத்தி கடந்த 22-10-2023 அன்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன்.
அவ்வாறு மத்திய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது, கிடைக்கப்பெரும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கு தான் சட்டரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.
மாறாக, அந்தந்த மாநில அரசுகள் சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரிப்பது, அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்பது பின்னர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.
எனவேதான் இந்த காரணங்களின் அடிப்படையில் ஏற்கனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்றும் தீர்மானங்களை முன்மொழிய விரும்புகிறேன்.
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை தீட்டி சட்டங்களை இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்.
எனவே, 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை ஒருமனதாக வலியுறுத்துகிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சாதி வாரி கணக்கெடுப்பு மீதான தனித்தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பதவியேற்ற ஓம் பிர்லா… முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டிய ராகுல்