புதுடெல்லி/சென்னை:
“தேர்வு முடிஞ்சிருச்சு… மார்க் அப்புறம் பாத்துக்கலாம்” என்று இனி பள்ளிகள் மெத்தனமாக இருக்க முடியாது. 2025ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மிக முக்கியமான மற்றும் கறாரான வழிகாட்டுதல்களை (SOPs) வெளியிட்டுள்ளது.
இதன்படி, செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் அதே நாளில், மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தாக வேண்டும். “நாளைக்கு பார்த்துக்கலாம்” என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிபிஎஸ்இ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் பிராக்டிகல்:
சிபிஎஸ்இ அறிவிப்பின்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள், ப்ராஜெக்ட் பணிகள் மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகள் (Internal Assessment) வரும் ஜனவரி 1, 2025 முதல் தொடங்குகின்றன.
புதிய விதிமுறைகள் என்ன?
தேர்வுகள் நேர்மையாகவும், பிழையின்றியும் நடப்பதை உறுதி செய்யப் பள்ளிகளுக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:
உடனடி பதிவேற்றம்: பிராக்டிகல் தேர்வு முடிந்த அன்றைய தினமே, சம்மந்தப்பட்ட புறத் தேர்வாளர் (External Examiner) முன்னிலையில் மதிப்பெண்களை இணையதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
திருத்த முடியாது: ஒருமுறை மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்துவிட்டால், அதை எக்காரணம் கொண்டும் பிறகு திருத்த முடியாது. எனவே, மதிப்பெண்களைப் பதிவு செய்யும்போது மிகுந்த கவனம் தேவை.
ஆதாரங்கள் தேவை: தேர்வு நடக்கும்போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோக்களையும் (Geo-tagged Photos) அன்றைய தினமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வருகைப் பதிவு கட்டாயம்:
மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், செய்முறைத் தேர்விற்கான வருகைப் பதிவு. “ஒருவேளை உடம்பு சரியில்லை, வர முடியவில்லை” என்றால், உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே, அத்தகைய மாணவர்களுக்குப் பிரத்யேகமாகக் கால அவகாசம் கொடுத்து, பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் மறு தேர்வு நடத்த அனுமதிக்கப்படும். இல்லையெனில், ‘ஆப்சென்ட்’ என்று மார்க் செய்யப்பட்டுவிடும்.
ஏன் இந்த கெடுபிடி?
கடந்த காலங்களில் சில பள்ளிகள் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு செய்வதாகவும், காலதாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கவே, “தேர்வு முடிந்த கையேடு மார்க்” என்ற முறையை சிபிஎஸ்இ கையில் எடுத்துள்ளது.
எச்சரிக்கை:
விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அந்தப் பள்ளியின் அங்கீகாரம் (Affiliation) ரத்து செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், செய்முறைத் தேர்வையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு தயாராகுங்கள். ஏனெனில், இதுவும் உங்கள் மொத்த மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியப் பகுதி!
