ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் தோஹா மாவட்டம், கிஷ்த்வார் வட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் கிரு நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரூ.2200 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
2018 ஆகஸ்ட் முதல் 2019அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஜம்மூ காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், கிரு நீர்மின் திட்டத்தின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க 300 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சத்ய பால் மாலிக் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, மும்பை என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
சத்யபால் மாலிக் பிரதமர் மோடி மீதும், மத்திய அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர்.
இவர் மேகாலயா ஆளுநராக இருந்தபோது, பிரதமர் மோடி திமிரு பிடித்தவர் என கூறினார். ”500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என பிரதமர் மோடியிடம் சொன்ன போது, அதற்கு அவர், விவசாயிகள் எனக்காகவா? உயிரிழந்தார்கள் என கேட்டார்.
நீங்கள் தானே பிரதமர் என்று அவரிடம் வாக்குவாதம் செய்தபோது, அவர் அமித்ஷாவிடம் பேசுங்கள் என கூறினார். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து அமைச்சர் அமித்ஷாவிடம் சொன்ன போது, அவர் ஏதோ பேசிவிட்டார் விட்டுவிடுங்கள் என கூறினார்” என்று கூறியிருந்தார் சத்ய பால் மாலிக்.
குறிப்பாக 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பாஜக அரசுதான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.
ஜம்முவில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல விமானங்களை கேட்டும் மத்திய அரசு தரவில்லை. இதனால் சாலைவழியாக ராணுவ வீரர்கள் செல்ல நேரிட்டது.
விமானம் மூலம் வீரர்கள் சென்றிருந்தால் புல்வாமா தாக்குதல் நடந்திருக்காது. இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் நான் பேசிபோது அவர் என்னை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார் சத்யபால் மாலிக்.
இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது சுமத்தியிருக்கும் சத்ய பால் மாலிக் சிபிஐ ரெய்டு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 3-4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
எனது வீடு சர்வாதிகார அரசு அமைப்புகள் மூலம் சோதனையிடப்படுகிறது. எனது ஓட்டுநர் மற்றும் எனது உதவியாளரையும் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர்.
நான் ஒரு விவசாயியின் மகன், இந்த சோதனைகளுக்கு நான் பயப்படமாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் மா.செ.க்கள் கூட்டம்- காரணம் என்ன?