கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (ஜூலை 14) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு தினமும் 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை (ஜூலை 16) சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது. தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது.
இவ்வாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையின்படி அமைப்பின் வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது.
காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன்.
இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தயாரா? – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!