‘தமிழக முதல்வர் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள முதலாளிகளை தேடி இங்கு தொழில் தொடங்க கொண்டு வருகிறார். இங்குள்ள தமிழக விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆவது?” என்று காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று (செப்டம்பர் 3) மாலை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், “காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வந்திருக்கக்கூடிய பேராபத்து குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சிப்காட் என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் எல்லாம் தொழிற்சாலை மண்டலங்களாக, ரசாயன மண்டலங்களாக மாற்றி, வேளாண்மையை முற்றிலுமாக அழிக்க கூடிய திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்மொழிந்து செயல்படுத்தி வருகிறது. திருச்சியில் ஏற்கெனவே தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நிலையில் அங்கு சிப்காட் அறிவித்துள்ளனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் கரையாப்பாலூர், திருத்துறைப் பூண்டி அருகே கொற்கையில் சிப்காட் அமைக்கவுள்ளனர்.
எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக கொண்டு வரப்பட்ட ஆணையை மீறி, பெரும் தொழில் மண்டலமாக மாற்றும் வேலையில் தான் தமிழ்நாடு அரசு தற்போது இறங்கியுள்ளது.
இந்த சிப்காட்டில் வேளாண் சார்ந்த தொழில் கொண்டுவரப்படும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை, எந்தத் தொழிற்சாலை வந்தாலும் அனுமதி வழங்கப் போகிறார்கள்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொடங்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
விவசாயிகள் இங்கே விவசாயம் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், இரண்டு லட்சம் கன அடி காவிரியில் வந்தபோது அதனை கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிட்டு, காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவு தண்ணீரை திறந்தனர்.
அந்த தண்ணீரும் இதுவரை ஏரி, குளங்களுக்கு சென்று சேரவில்லை. விவசாயம் செய்யக்கூடாது என்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டம்.
அந்த விவசாயத்தை மீறி செய்கிறார்களே என்கிற எண்ணத்தில் தான் வெள்ளம் வந்த காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடவில்லை.
இதை எதிர்த்தும், சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம்.
தமிழக முதல்வர் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள முதலாளிகளை தேடி இங்கு தொழில் தொடங்க கொண்டு வருகிறார். இங்குள்ள தமிழக விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆவது? எனவே சிப்காட் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக பாதுகாக்கப்பட வேண்டும்” என்று மணியரசன் கூறினார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ரவை ஸ்வீட் கொழுக்கட்டை!
பியூட்டி டிப்ஸ்: பாஸ்மதி ரைஸ் சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?