காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 11) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்க மறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள், விவசாயிகள் கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தஞ்சாவூரில் அக்டோபர் 7-ஆம் தேதி திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, காவிரி விவசாய இயக்கங்கள் ஆதரவு கொடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், முழு அடைப்பு போராட்டம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக டெல்டா பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லியோ நடன கலைஞர்கள் சம்பள விவகாரம்: மறுப்பு தெரிவித்த பெப்சி!
