உற்பத்தி குறைவால் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், பழமாபுரம், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், மல்லூர், சின்னசேலம், மின்னாம்பள்ளி, கீரனூர், மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த வாரம் ஜவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று 9,000 ரூபாய்க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் 10,000 ரூபாய்க்கு வாங்கிச் சென்றனர். தற்போது ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு 12,000 ரூபாய்க்கும் சிப்ஸ் தயாரிப்பவர்கள் 13,500 ரூபாய்க்கும் வாங்கி செல்கின்றனர். வரத்து குறைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
**-ராஜ்**
