வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படுவதாகவும் பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை விரிவாக்க மையங்களில் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது தங்களது பங்களிப்பு தொகையை இ-சலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (யு.பி.ஐ) மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்துக்கு ஒரு வட்டாரத்தில் செயல்படுத்த உள்ளதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேற்கண்டவாறு பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டது.
தற்போது இது அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவுபடுத்தப்பட்டு , நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மைய பணியாளர்களுக்குப் பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் விற்பனை இட கருவிகள் அல்லது ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் செயல்படுத்தப்படும் இந்தப் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயனடையலாம்” என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்