நிதிச் சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகள் குறித்து அரசுக்கு உதவுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2021 – 22 ஆம் ஆண்டின் பட்ஜெட் திட்ட உரையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசுக்கு அதிக நிதி சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகள் குறித்து வழிகாட்டுவதற்காக வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
1. ஓய்வுபெற்ற நீதிபதி கே. கண்ணன். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ரயில்வே கோரிக்கைகள் தீர்ப்பாய முன்னாள் தலைவர்.
2. வழக்குரைஞர் ஜோசப் பிரபாகர், மறைமுக வரி விதிப்பு வல்லுநர்.
3. வழக்குரைஞர் கே. ரவி, நேரடி வரி விதிப்பு வல்லுநர்.
4. வழக்குரைஞர் வி. லக்ஷ்மி நாராயணன், உரிமையியல் வழக்கு வல்லுநர்.
5. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை.
6. அரசு செயலாளர், சட்ட விவகாரங்கள்.
இக்குழு நீதிமன்ற வழக்குகளால் அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கான உத்திகளைத் தெரிவித்தல், நீதிமன்ற அமைப்புகளில் பின்பற்ற வேண்டிய பல்வேறு அணுகுமுறைகள் மற்றும் பாதகங்களை கருத்தில் கொண்டு ஆலோசனை வழங்குதல், குறிப்பிட்ட வழக்கில் வெற்றி வாய்ப்புகளை மதிப்பீடு செய்து இணக்கமாகச் செல்லுதல் அல்லது வழக்கின் நிலைகளை மாற்றி அமைத்தல் முதலியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல், அதிக நிதிச் சுமையை உருவாக்கக்கூடிய வழக்குகளில் நிதிச்சுமைகளைக் குறைக்கும் பொருட்டு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தாமதத்திற்கான அபராத வட்டி போன்ற மிகை செலவுகளைத் தவிர்க்கும் வகையில் நீதிமன்ற ஆணைகளின் நிறைவேற்றத்தைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தின் போது, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது தொடக்கக் குறிப்பில் தற்போதைய சூழ்நிலையில் அதிக நிதி சுமையை உருவாக்கக்கூடிய வழக்குகள் அனைத்தையும் கூர்ந்து கண்காணிக்கும் பொருட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வலுவான தரவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
**-பிரியா**