உதயநிதியிடம் 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு : கோர்ட்டு உத்தரவு!

Published On:

| By Kavi

படப்பிடிப்பில் பங்கேற்காததால் உதயநிதி ஸ்டாலின் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஒஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் கே எஸ் அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது.

80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. 20% பணிகள் மட்டுமே முடிக்கப்பட வேண்டி இருக்கும் நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்தார்.

மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் உதயநிதி ஸ்டாலின் கால்ஷீட் தராமல் இருப்பதால் படம் நிறைவடையாமல் இருக்கிறது. எனவே எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். இழப்பீடாக 25 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தனக்கு எதிராக ராமசரவணன் காலதாமதமாக மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி டீக்காராமன் விசாரித்து வந்தார். அப்போது, ஓ எஸ் டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, ‘ஏஞ்சல் படத்துக்காக 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதால் இந்த படத்தின் உதவி இயக்குனர்கள் மற்றும் திரை கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ ஆஜராகி, “ஏஞ்சல் படம் தொடர்பாக தயாரிப்பாளரை உதயநிதி ஸ்டாலின் பலமுறை தொடர்பு கொண்டார். படத்தில் தனக்கென காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதால் மாமன்னன் படத்தில் நடித்தார்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இன்று (நவம்பர் 20) தீர்ப்பு வழங்கிய நீதிபதி டீக்காராமன், துணை முதலமைச்சர் உதயநிதியின் மனுவை ஏற்று ஒ எஸ் டி பிலிம்ஸ் நிறுவனம் உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஏ.ஆர். ரஹ்மான் குழு கிட்டாரிஸ்ட் மோனிகி தே கணவரை பிரிந்தார்!

‘அரசுப்பள்ளி ஆசிரியர் கொலை அச்சமூட்டுகிறது’ : அதிமுக தலைவர்கள் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share