தமிழக மீனவர் காயம்: இந்தியக் கடற்படை மீது வழக்குப் பதிவு!

Published On:

| By Monisha

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் இந்தியக் கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று (அக்டோபர் 21) அதிகாலை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, ஒரே ஒரு படகு மட்டும் கடலிலிருந்ததால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையினர் ஒலிபெருக்கி மூலமாகப் படகை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

ஆனால், மழை பெய்து கொண்டிருந்ததால் மீனவர்களுக்குக் கடற்படையினரின் உத்தரவு சரியாகக் கேட்கவில்லை. இதனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால் கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ADVERTISEMENT

இதில் படுகாயமடைந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல், தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ’இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்’ என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்தியக் கடற்படை விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், மீனவர்களும் இந்தியக் கடற்படை மீது புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்தியக் கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இன்று (அக்டோபர் 22) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலை முயற்சி, ஆயுத சட்டம், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், பயங்கர ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோனிஷா

திமுக: தென்காசி வடக்கு, தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்!

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share