செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது: அமலாக்கத் துறை!

Published On:

| By Kalai

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது  மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். 

அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி  தாக்கல் செய்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று(அக்டோபர் 19) விசாரணைக்கு வந்தது.

அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வேலைக்காக இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற  லட்சக்கணக்கான ரூபாயை செலவழிப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தமிழக அரசியலில் அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அதனை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

கலை.ரா

நடிகர் அர்ணவுக்கு ஜாமீன் இல்லை: நீதிமன்றம் அதிரடி!

யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share