எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் வழக்கில் மேல் நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் 2016ஆம் ஆண்டை காட்டிலும் 2021 ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் அளவிற்கு தனது சொத்து விபரங்களை குறைத்து காட்டியுள்ளார். அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனியைச் சேர்ந்த மிலானி, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சேலம் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சேலம் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். இதற்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 25ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (ஜனவரி 27) நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கில் பதில் தர தமிழ்நாடு அரசு, மிலானிக்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பினர்.