புகை பிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 10) ரத்து செய்தது.
2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. இதன் இயக்குநராக தனுசும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் உள்ளனர்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த காட்சி வரும்போது, ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’ போன்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை.
இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் பழனி வழக்கு தொடர்ந்தார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இயக்குநர் பழனியின் புகாரை ரத்து செய்யக் கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சைதாப்பேட்டையில் உள்ள வழக்கின் விசாரணையின் போது இருவரும் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.
அவர், “2003 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பர தடை மற்றும் வர்த்தக விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல” என்று வாதிட்டார்.
மேலும், “வேலையில்லா பட்டதாரி படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்று அளித்துள்ளதாகவும் புகார் கொடுப்பதற்கு முன்னதாக எங்கள் தரப்பில் விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றும் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதாடினார் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன்.
அதேசமயம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கூடாது என்று தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார்.
நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
பிரியா
செந்தில்பாலாஜி புத்தர், ஆளுநர் வில்லனா? முதல்வர் கடிதத்தால் ஒன்றும் ஆகாது: அண்ணாமலை
”தக்காளி இலவசம்”: அறிவிப்பால் அதிகரித்த ஸ்மார்ட் போன் விற்பனை!