கோவை உக்கடத்தில் மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் உயிரிழந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் காரில் பயணித்த ஜமேஷா முபீன் என்ற நபர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த இடம், ஜமேஷா முபீன் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாராணை மேற்கொண்டு வந்தனர்.
ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து முபீன் உள்பட நான்கு நபர்கள் ஒரு பெரிய வெள்ளை நிற சாக்கு பையில் மர்ம பொருளை அவரது வீட்டிலிருந்து எடுத்து செல்வது போன்றும், மாருதி கார், கோவிலின் அருகில் அதிகாலை 4 மணியளவில் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தநிலையில், கோவை மாநகரம் பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த வழக்கில், போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா மற்றும் முகமது அசாருதீன், ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கோவை சிலிண்டர் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்