டெல்லி செங்கோட்டை அருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் காரின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை (நவம்பர் 11) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார் வெடிகுண்டுத் தாக்குதலில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகின. மேலும் இந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தால் தலைநகர் டெல்லி பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தும் சதித் திட்டத்துடன் காஷ்மீர் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ வெடி மருந்துகளை டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீசார் பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உட்பட சிலர் இந்த நாசகார சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விளக்கம் கேட்ட அமித்ஷா
கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, டெல்லி மாநகர போலீஸ் கமிஷனை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
மோடி ஆலோசனை
இதனிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
