உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தலை சுதந்திரமாக, வெளிப்படைத்தன்மையோடு நடத்தவும், மக்களை ஆர்வமுடன் வாக்களிக்க ஊக்கப்படுத்தவும் தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. Nominations Election Commission
தேர்தல் நடத்தும் முறையிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப வாக்குசீட்டு முறையை மாற்றி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு வந்தது. சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அந்த வகையில் தேர்தல் என்றால் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதை அரசியல் கட்சிகள் முக்கியமான பணியாக பார்க்கின்றனர். பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போதே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கட்சி தொண்டர்களுடன் வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள்.
ஆனால் இனி வரும் நாட்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஆன்லைனிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக தேர்தல் ஆணையம் புதிதாக சுவிதா என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. https://suvidha.eci.gov.in/ என்ற இந்த இணையதளத்தில் வேட்பாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை லாக் இன் செய்து பின்னர் தங்கள் வாக்காளர் அட்டை எண்ணை கொடுத்தால் அவர்களில் சுய விபரங்கள் அனைத்தும் தானாக பூர்த்தியாகி விடும்.
பின் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். மேலும் வேட்பாளர்கள் இந்த தளத்தில் வரவு செலவு தாக்கல், பிரச்சாரத்திற்கான அனுமதி, பாதுகாப்பு போன்றவைகளுக்கான கோரிக்கைகளையும் முன் வைக்கலாம்.
இதனால் வேட்புமனு தாக்கலின் போது ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்பதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கலாம் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நடைமுறையை வரவுள்ள பீகார் தேர்தலில் கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன் தாக்கத்தை பொறுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்ட தேர்தல்களில் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
