வைஃபை ஆன் செய்ததும், ‘கடந்த வாரம் முழுவதும் நடந்த ஐடி ரெய்டுகளை மையமாக வைத்து பல்வேறு செய்திகள் வந்தன. ரெய்டு முடிந்து ஒரு வாரம் ஆகியும் வருமான வரித்துறையிடமிருந்து அது பற்றி எந்த தகவலும் இல்லையே?’என்ற கேள்வி இன்பாக்ஸில் வந்தது.
இதற்கு பதில் அளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் கடைசி வாரம் முழுவதும் தமிழ்நாடு பெங்களூர் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் கட்டுமானம் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் தமிழக முதல்வர் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் தொடர்புடையது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
எங்கள் நிறுவனத்துக்கும் முதலமைச்சரின் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜி ஸ்கொயர் 29 பக்க அறிக்கையை வெளியிட்ட அன்றுதான் ரெய்டும் தொடங்கியது. திமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணா நகர் மோகன், அவரது மகன் கார்த்தியும் இந்த ரெய்டுகளில் குறிவைக்கப்பட்டனர். சபரீசனுடைய ஆடிட்டர் சண்முகராஜா குறித்து பரபரப்பான தகவல்கள் பேசப்பட்டன. இந்த ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பே திமுகவின் சில தலைமை கழக நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, ‘மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை நாம் அரசியல் ரீதியாக எதிர்க்கிறோம்.அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதே நேரம் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் நாம் இன்னும் கொஞ்சம் இணக்கமாக நடந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை குறி வைத்து மத்திய அரசின் ஏஜென்சிகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், ‘டெல்லி விவகாரங்களை சபரீசன் பார்த்துக் கொண்டிருக்கிறார். சரியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றன’என்று சொன்னதாக திமுகவின் சீனியர் நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த பின்னணியில் ஏப்ரல் கடைசி வாரத்தில் சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தது திமுகவில் சில அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது.
டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, ‘ஹைதராபாத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு நெருக்கமான சில நண்பர்களோடு சபரீசன் தரப்பினர் பிசினஸ் ரீதியாக நல்ல தொடர்பில் இருந்தனர். இந்த அடிப்படையில் தான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சபரீசன் தரப்பிலே நம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கட்சி நிர்வாகம் வேறு ஆட்சி நிர்வாகம் வேறு என்ற அடிப்படையில் பிரதமர் அலுவலக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்திருக்கிறது. டெல்லி துணை முதல்வர் கைது, பிகாரில் லாலு பிரசாத் குடும்பத்தினரை குறி வைத்து நடவடிக்கைகள், தெலங்கானாவில் கே சி ஆரின் மகள் கவிதா மீதான நடவடிக்கைகள், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதான நடவடிக்கைகள் வரிசையில் தமிழ்நாட்டிலும் தொடரும். இதை திமுக எதிர்பார்த்து இருக்காது’ என்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழனறு சென்னை திரும்பிய சபரீசன் எந்த பிரச்சனையும் இல்லை என முதல்வரிடம் தெரிவித்திருக்கிறாராம்.
சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில்
ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து தனித்தனியாக பேசியிருக்கிறார் முதலமைச்சர். அப்போது நாம் மத்திய அரசோடு நிர்வாக ரீதியில் இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியில் வேறுபட்டு முரண்பட்டு இருக்கிறோம். அதனால் நம் மீது எந்த வகையிலாவது நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். அதனால் எல்லா வகையிலும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி இருக்கிறார் முதல்வர் ” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.