முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 14) மாலை தலைமை செயலகத்தில் கூடியிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவது குறித்து முதல்வர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அது தொடர்பாகவும் ஓபிசி இட ஒதுக்கீடு, மற்றும் கொரோனா தடுப்பு சிறப்புப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சார அமைச்சர் தங்கமணி, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை. சமீப காலங்களில் மூன்று முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இல்லாமல் நடக்கும் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
