தமிழகம்: மின்னணு தராசு விற்பனை சரிவு!

Published On:

| By Balaji

சரக்கு மற்றும் சேவை வரித் திட்டத்தால் தமிழகத்தில் மின்னணு தராசு விற்பனை 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தராசு தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 150 மின்னணு தராசு உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், அவற்றை விற்பனை செய்வதற்கென 3000 சிறிய மற்றும் பெரிய கடைகளும் உள்ளன. இந்த நிறுவனங்கள் 5 கிலோவிலிருந்து 5 டன் வரையிலான தராசுகளைத் தயாரிக்கின்றன. இதற்கான மூலப்பொருட்கள் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. தமிழகத்தில் இதற்கான விற்பனை வரி 12.5 சதவிகிதம் ஆகும். ஆனால் வெளி மாநிலங்களில் வாங்கினால் 19.5 சதவிகிதம் ஆகிறது. அதனால் வியாபாரிகள் பலர் தமிழகத்தில் மட்டுமே இத்தராசுகளை வாங்குகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு தராசுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் ஒரே விலையில் விற்கப்பட்டு தமிழகத்தில் விற்பனை குறையத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தராசு விற்பனையாளர்கள் தினகரன் ஊடகத்திடம் கூறுகையில், “முன்பு தராசு ஒன்று ரூ.10,000க்கு விற்கப்பட்ட நிலையில், 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.11,800 க்கு தற்போது விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்குக் கிடைக்கும் லாபம் குறைவதோடு விற்பனையும் குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share