cஆசியக் கோப்பை: நாடுகளைக் கடந்த நட்பு!

Published On:

| By Balaji

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக நீடித்துவரும் பகை உணர்வு இன்னும் தொடர்ந்துவரும் நிலையில், இரு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இருவர், கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை என்பதைத் தற்போது நிரூபித்துள்ளனர்.

37 வயதான சுதிர் குமார் பீகாரின் முஸாஃப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி உலகின் எந்த மூலையில் நடைபெற்றாலும் தவறாமல் அங்கு ஆஜாராகிவிடுவார். சிறுவயது முதல் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான இவருக்கு சச்சினே ஒவ்வொரு போட்டிகளின் டிக்கெட்டுகளையும் ஸ்பான்சர் செய்வார். ஆனால் இம்முறை துபாயில் நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக சுதிர், சச்சினைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் அப்போது அவர் லண்டனில் இருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால் ஆசியக் கோப்பை தொடரைக் காண்பதில் சுதிருக்கு சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் அவரது நண்பரும், பாகிஸ்தானின் தீவிர ரசிகருமான முகமது பஷீரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

பாகிஸ்தானில் பிறந்தவரான பஷீர், சிக்காகோவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரும் பாகிஸ்தானின் தீவிர ரசிகர் என்பதால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றாலும் அங்குத் தவறாமல் வந்துவிடுவார். அப்படி 2011ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் விளையாடிய போட்டியில்தான் சுதிர், முதல் முறையாக பஷீரை சந்தித்திருக்கிறார். அன்று முதல் இன்று வரை இந்தியா, பாகிஸ்தான் போட்டி எங்கு நடந்தாலும் அங்கு சென்று இருவரும் சேர்ந்தே பார்ப்பர். இம்முறையும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை சுதிருடன் சேர்ந்து பார்க்கும் ஆவலுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் பஷீர்.

ஸ்பான்சர் இல்லாத காரணத்தால் தான் இந்த இம்முறை வர முடியாத காரணத்தை சுதிர் அவருக்கு விவரித்திருக்கிறார். உடனே சற்றும் யோசிக்காத பஷீர், சுதிருக்கு டிக்கெட்டுகளை ஸ்பான்சர் செய்தது மட்டுமின்றி அவரது செலவிலேயே இந்திய அணியினர் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் இருவருக்கும் தங்க அறை ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

பின்னர் இருவரும் இந்தியா, பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளை சேர்ந்தே பார்க்கத் தொடங்கினர். ஆனால் அந்த இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. நேற்று (செப்டம்பர் 26) நடைபெற்ற முக்கிய ஆட்டத்திலும் பாகிஸ்தான், வங்கதேசத்திடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குள் நுழையாமல் வெளியேறியது. இது பாகிஸ்தானிய ரசிகரான பஷீருக்கு ஒருபுறம் ஏமாற்றமாக இருந்தாலும், தன் நண்பன் சுதிருக்கு இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை ஸ்பான்சர் செய்துவிட்டு ஊருக்கு கிளம்பியிருக்கிறார்.

என்னதான் பஷீர் ஒரு பாகிஸ்தானியராக இருந்தாலும், அவருக்கு இந்திய அணியின் கிரிக்கெட் மீதும், மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தின் மீதும் அளவு கடந்த பிரியம் இருப்பதாக AFP ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share