2022 ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் வெற்றி பெற்றுள்ளார்.
27 ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 21 அன்று தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று (ஆகஸ்ட் 23) நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் ஹங்காங் வீராங்கனை சியிங் நாகன் யியை வீழ்த்தினார்.

சாய்னா 38 நிமிட விளையாட்டுக்குப் பிறகு சியிங் நாகன் யியை 21-19 மற்றும் 21-9 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இரண்டாவது சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நொசோமி ஒகுஹாரா போட்டியிடுவதாக இருந்தது.
ஆனால் ஜப்பான் வீராங்கனைக்கு ஏற்பட்ட காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை விட்டு அவர் விலகியதால் சாய்னா நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் டானிஷ் நாட்டு வீராங்கனையிடம் 14-21 மற்றும் 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

நடப்பாண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பி.வி. சிந்து காயம் காரணமாகப் போட்டியை விட்டு விலகியதால் இந்தியாவிற்கான பதக்கத்தை சாய்னா நெவால் கைப்பற்றுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மோனிஷா