”தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூடிய விரைவில் அருமையான சின்னம் வந்துவிடும்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ”அவர் இதை சொல்லிட்டார்.. இவர் இதை சொல்லிட்டாருன்னு நினைக்காதீங்க.. எல்லோரும் எல்லா வேலையும் பார்ப்பாங்க.. அப்படியா சொன்னா சொல்லிட்டுப் போகட்டும்.. நாங்க இருக்கிறதே விஜய்க்காக மட்டுமே.. வேற யாருக்காகவும் இங்கே இல்லை.. அப்படின்னு சொல்லிட்டு எல்லாத்தையும் கடந்து போய்க் கொண்டே இருங்கள்.. எதைப் பற்றியும் யோசிக்காமல் கவலைப்படாமல் இருங்க..
வீடு வீடாக செல்லுங்கள்.. மக்கள் குறைகளை கேளுங்க.. சின்ன சின்ன உதவிகளை செஞ்சு கொடுங்க.. நமக்கு மக்கள் ஓட்டுப் போட தயார்.. திருச்செங்கோடு வேட்பாளர் யார் என்பதை விஜய் அறிவிப்பார். அவர் யார்? அவர் என்ன செஞ்சிருக்கார்? அவர் என்ன படிச்சிருக்கார்? என்பதை சொல்ல வேண்டியது உங்க கடமை.. என்ன சின்னம்னு சொல்ல வேண்டியது உங்க கடமை..
கூடிய விரைவில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரு அருமையான சின்னம் வந்து விடும்.. நாம கட்சி ஆரம்பித்த 15 நிமிடத்திலேயே உலகம் முழுவதும் தெரிஞ்ச ஒரே கட்சி நம்ம தவெகதான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் களம் எளிதானது இல்லை. 234 தொகுதிகளில் வரலாறு படைப்போம். நான் சேர வேண்டிய இடத்துக்குதான் வந்து சேர்ந்துள்ளேன். பெண்கள் பாதுகாப்புக்கு விஜய்யை விட்டால் யாரும் இல்லை என்றார்
மேலும் தவெக பொதுச்செயலாளர்களில் ஒருவரான அருண்ராஜ் பேசுகையில், தவெக எங்கெல்லாம் கூட்டம் நடக்குதோ அங்கெல்லாம் போலீசார் 108 கண்டிஷன்ஸ் போடுறாங்க.. ஈரோட்டுக்கும் கூட 80 நிபந்தனைகள் விதிச்சிருக்காங்க.. இதுக்கு மட்டும்தான் தமிழக காவல்துறையின் மூளையும் அறிவும் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
