அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ் நிறுத்தத்தை பஸ்கள் புறக்கணித்து செல்வதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை காந்திநகர், ஆத்திபட்டி, திருச்சுழி, ரெட்டியாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பொது மக்களின் வசதிக்காக தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காந்தி நகர் பகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை புறநகர் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதைக் கடந்த ஆண்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். ஆனால், தற்போது தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர் புறநகர் பஸ்கள் அருப்புக்கோட்டை புறநகர் பஸ் நிறுத்தத்துக்கு வருவதில்லை.
ஒரு சில பஸ்கள் வந்தாலும் பஸ் நிறுத்தத்துக்கு உள்ளே வராமல் சாலையிலேயே பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எந்த நோக்கத்துக்காக புறநகர் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் போய்விட்டதாக பயணிகள் கூறுகின்றனர். எனவே உடனடியாக போக்குவரத்து துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு புறநகர் பஸ்கள் பஸ் நிறுத்தத்தின் உள்ளே வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-ராஜ்**