அரசு கட்டிடங்களின் பெயர்கள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே அரசாணையில் திரும்ப பெறப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் ஊழல்கள், முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து இன்று (ஜூன் 24) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினர்.
அப்போது வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது,
“அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்படி போராட்டம் செய்தால் ஊதியத்தை கட் செய்து விடுவோம் என்று அரசு மிரட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
இந்த அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மூன்று நாட்கள் ஓய்வு போதும். ஆனால் மூன்று மாதம் ஓய்வு என்று மருத்துவமனை கூறி உள்ளது. ஏனென்றால் செந்தில் பாலாஜியிடம் யாரும் தகவல் பெறக் கூடாது என்ற காரணத்தினாலும்,
கடந்த ஒரு வருட பார் உரிமை பணம் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்று அடையவில்லை, அதை மீட்கவும் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.
அம்மா ஆட்சிக்காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டது அந்த திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது.
கலைஞர் நூலகம், கலைஞர் கோட்டம், கலைஞர் மருத்துவமனை என்று கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சியாகும். மக்கள் யாரும் கருணாநிதி பெயர் வைக்க விரும்பவில்லை.
ஒரே ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், வந்தவுடன் ஒரே அரசாணையில் அந்த பெயர்கள் எல்லாம் திரும்பப்படும்.
அதேபோல் திமுக தேர்தல் கூட்டணி கட்சிகள் எல்லாம் உடைந்து போய்விடும். சாராய சாவுக்கு ஸ்டாலின் தான் முழு பொறுப்பு.
வரும் ஆகஸ்ட் 20 நடைபெறும் மாபெரும் மாநாட்டிற்கு இந்த ஆர்ப்பாட்டமே முன்னோடியாக இருக்கும்” என்று வி.வி.ராஜன் செல்லப்பா பேசினார்.
இராமலிங்கம்