முரளி சண்முகவேலன், லண்டன்
மின்னம்பலத்தில் இந்தக் கட்டுரை பதிக்கப்படும்போது பிரிட்டன் தனது நாடாளுமன்றத் தேர்தலுக்கான விடியலை நோக்கி இருக்கும். டிசம்பர் 12ஆம் தேதி பிரிட்டனில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், நான் குடியேறிய பின் நடைபெறும் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். பிரிட்டனில் வாக்குரிமை கொண்ட தமிழன் என்ற வகையிலும், மோடியின் இந்துத்துவக் கொள்கைகள் பிரிட்டனில் வேரூன்றி வரும் நிலையிலும் இந்தத் தேர்தல் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும்.
பிரிட்டனின் தேர்தல் பரப்புரையில் ‘டோரி’ என்றழைக்கப்படும் கன்சர்வேட்டிவ் (பாரம்பரியக்) கட்சி இந்து மக்களை மோடியின் இந்துத்துவ அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்த்து வாக்கு வங்கியாக மாற்றுவதற்கான பரப்புரையில் ஈடுபட்டு வந்துள்ளது. வாட்ஸ் அப் குரூப்புகளில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் டோரி கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சனை வெற்றிபெற வைத்து ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என முனைப்போடு உள்ளனர். உண்மைக்குச் சற்றுமே சம்பந்தமில்லாத வாட்ஸ் அப் பரப்புரைகள் பறந்த வண்ணம் இருந்து வருகின்றன. அந்த வகையில் இக்கட்டுரை, பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்த இந்துக்கள் மற்றும் தமிழ் வாக்காளர்களின் பொறுப்பு பற்றியதாகும்.
இந்தத் தேர்தலின் பின்னணி காரணம் ப்ரெக்ஸிட். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற 2016ஆம் ஆண்டு, 51.9 சதவிகித வாக்காளர்கள் (13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்) வெளியேற முடிவெடுத்ததில் இருந்து பிரிட்டனின் அரசியல் ஒருவிதமான கொதிநிலையிலேயே இருந்து வந்துள்ளது. ஐரோப்பாவை விட்டு வெளியேறுவதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் இந்த மூன்று ஆண்டுகளில் பிசுபிசுத்து விட்டது. உதாரணமாக, ஐரோப்பாவை விட்டு விலகினால் பிரிட்டனின் பொது மருத்துவத் துறைக்கு வாரம் 350 மில்லியன் பவுண்டுகள் வருமானம் ஏற்படும் என்பது வடிகட்டிய பொய் என நிரூபிக்கப்பட்டு விட்டது.
நடப்பில் பிரிட்டனில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சமத்துவமின்மை நிலவி வருகிறது. உலகின் ஐந்தாவது பணக்கார நாடான பிரிட்டனில் ஒன்றே கால் லட்சம் குழந்தைகள் வீடின்றி இருக்கின்றனர். லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு 2016 ஆம் ஆண்டு மட்டிலும் பனிக்காலத்தில் குளிரின் காரணமாக 9,000 பேர் இறந்ததாகக் கூறுகிறது. சமீபத்தில் பிபிசியில் வெளியான ரச்சேல் என்பவர் வீடின்றி தனது மகனுடன் 18 உள்ளூர் பைசா (Pence) மட்டுமே வைத்துக்கொண்டு பனியுடனும் பசியுடனும் சுயமரியாதையுடனும் போராடிவரும் அவலம், பெரும் செய்தியானது.
உண்மை நிலவரம் இப்படியிருக்க பிரிட்டன் வாழ் இந்துத்துவ இந்துக்களும் (இதற்கு இந்திய முஸ்லிம்கள், சீக்கியர்கள் விலக்கு), இந்தியக் காதல்கொண்ட தமிழர்களும் லேபர் கட்சியின் ஜெரிமி கோர்பினுக்கு எதிராகப் பரப்புரை செய்து வருகின்றனர். மோடியின் காஷ்மீர் கொள்கைக்கு எதிராக காஷ்மீர மக்களின் உரிமைக்காக, கோர்பின் குரல் கொடுத்ததை இந்திய இறையாண்மைக்கு எதிராக லேபர் கட்சி இயங்குவதைப் போல் ஒரு பரப்புரையை இக்கூட்டத்தினர் உண்டாக்கி வந்துள்ளனர். முதன்முதலாக பிரிட்டனின் பொதுத் தேர்தலில் இந்துத்துவா ஓர் அரசியல் பொருளாகத் திரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரும் டோரி ஆதரவாளர்களாக உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் நான் உரையாடிய பல புலம்பெயர்ந்த தமிழர்களும் டோரி தலைவரான போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகப் பேசியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இவர்களில் பலரும் (அநேகர்கள் வர்த்தகம் செய்பவர்கள்) ப்ரெக்ஸிட் நிகழ்ந்தால் தங்களின் பொருளாதார நிலைக்கு முன்னேற்றம் ஏற்படும் என நம்புகின்றனர். ஐரோப்பியர்கள் வெளியேறினால் தங்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் முன்னேறலாம் எனவும் கணக்குப் போடுகின்றனர்.
லேபர் கட்சியின் நிலைப்பாடு ப்ரெக்ஸிட் சம்பந்தமாக ஐரோப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அப்பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை மக்களின் முன்வைத்து மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதாகும். இதற்கான காரணம் ப்ரெக்ஸிட் குறித்த பேச்சு வார்த்தைகளின் உண்மை நிலையும் தன்மையும் டோரி கட்சியினரின் அளித்த உறுதிக்கு முற்றிலும் மாறாக இருப்பதே காரணமாகும். உதாரணமாக டோரி கட்சியினரின் வாக்குறுதியான “வாரம் 350 மில்லியன் மருத்துவத் துறைக்கு” என்பது பொய்யாகி ப்ரெக்ஸிட் விவாகரத்து தொகையாக 39 பில்லியன் பவுண்டுகள் பிரிட்டன் ஐரோப்பாவுக்கு அளிக்க வேண்டும் என்பது நடப்பு ப்ரெக்ஸிட் பேச்சுவார்த்தையின் ஒரு நிபந்தனையாகும். இந்தப் பெருந்தொகை பிரிட்டனை பெரும் பொருளாதார நெருக்கடிக்குக் கொண்டு செல்லும் என்பது லேபர் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடி உலகப்புகழ் பெற்ற பொதுமக்களின் வரியினால் நடத்தப்படுகின்ற அனைவருக்குமான பிரிட்டனின் பொது மருத்துவத் துறையை முற்றிலும் ஊனமாக்கி விடும் எனக் கொள்கை விற்பன்னர்கள் எச்சரித்துள்ளனர்.
அது மட்டுமல்ல; ப்ரெக்ஸிட் நிகழ்ந்தால் பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே வர்த்தகப் பேரம் நடத்த வேண்டிய சூழல் வரும். அப்படி நேர்கையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனின் மருத்துவத் துறையைத் தனியார் மயமாக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்த ரகசிய பேர அறிக்கைகள் கடந்த வாரம் ‘லீக்’ செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் கவலைப்பட எவ்வளவோ அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் பிரிட்டனில் உள்ள இந்துத்துவ வாதிகள் மத்தியில் லேபர் கட்சி இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாலும், இந்துக்களின் மனநிலையை அவர்களின் கலாச்சாரத்தைப் புண்படுத்தும் வகையில் செயல்படுவதாலும் லேபர் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாதென வன்மை பிரச்சாரம் செய்து வருகின்றனர். (சாதி) இந்துக்களுக்கு ஆதரவாக உள்ள டோரி கட்சியை வெஸ்ட்மினிஸ்டருக்கு அனுப்ப வேண்டும் எனவும் கங்கணம் கட்டிக்கொண்டு பரப்புரை செய்த வண்ணம் உள்ளனர்.
இந்துத்துவத்தை முன்னிறுத்தி மற்ற மக்கள் பிரச்சினைகளை மறக்கச் செய்து இந்தியாவில் பிஜேபி – ஆர்எஸ்எஸ் தங்களது தேர்தல் வெற்றியை எப்படி உறுதி செய்தார்களோ… அதே முறையை பிரிட்டனில் உள்ள யூகே ஹிண்டு கவுன்சில், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் பிரிட்டனில் உள்ள இந்துக்களை இந்துத்துவ ஆதரவாளர்களாகத் திரட்டி அவர்களை பிரிட்டனில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக செயல்படும் உத்தியை இந்தத் தேர்தலின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இது பாம்புக்கு பால் கொடுக்கும் செயலாகும். புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் சிலரோ (பலர் அப்படி இல்லை என்று நம்புவோமாக) ப்ரெக்ஸிட் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என மனக் கணக்குப் போடுகின்றனர். இரண்டுமே தவறு.
முஸ்லிம்களுக்கு எதிரான டோரி இந்த இந்துத்துவ, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையைத் தங்களது வாக்கு வங்கியாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது. இதே டோரி நாளை இந்துக்களை ஒடுக்க, மற்றவர்களை நாடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதேபோல ப்ரெக்ஸிட், தற்போதைய பேச்சுவார்த்தையின்படி நிகழ்ந்தால் பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலை ஏற்படும். அதன் விளைவாக பிரிட்டனில் உள்ள நாம் அனைவருமே பாதிக்கப்படுவோம்.
ஓர் ஆய்வின்படி பிரிட்டனில் உள்ள இந்துக்கள் லேபர் கட்சிக்கே தொடர்ந்து ஆதரவாக இருந்து வந்துள்ளனர். உதாரணமாக 1997 தேர்தலில் பிரிட்டனில் உள்ள இந்துக்களில் 77 சதவிகிதத்தினர் லேபருக்கு வாக்களித்துள்ளனர். 2014ஆம் ஆண்டில் இது 14 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதே சமயத்தில்தான் பிரிட்டனில் பிஜேபி – ஆர்எஸ்எஸ் அமைப்புகளும் தங்கள் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரிட்டனில் உள்ள இந்து இந்தியர்கள், ப்ரெக்சிட் ஆதரவு தெரிவிக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பிரிட்டனில் தற்போது பீடித்து வரும் அடித்தட்டு மக்களின் உண்மையான வாழ்வியல் பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், உங்கள் வாக்கு இன்றைய தினம் டோரிக்கானதாக இருக்காது என்பது எனது திடமான நம்பிக்கை.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]
https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/