பிகார் மாநிலத்தில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் திடீரென இன்று (ஜூன் 24) இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்டங்களை இணைக்கும் மெச்சி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கோரி என்ற கிராமத்தில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் கட்டுமான பணியின் போது இன்று(ஜூன் 24) திடீரென இடிந்து விழுந்தது.
கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி பிகார் மாநிலம் ககாரியாவில் 1,717 கோடி ரூபாய் செலவில் அகுவானி சுல்தங்கஞ்ச் கங்கையில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த போது அதை அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.
அப்போது, கட்டுமான பணிகளுக்கு கமிஷன் வாங்கும் போக்கு அதிகமாகவே இருப்பதால் தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அப்போது , பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த சம்பவம் கதிஹார் மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ANI யிடம் பேசிய அப்பகுதி மக்கள், “இங்கே மாநில அரசின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதற்கான எடுத்துக்காட்டு தான் இது.
பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் இன்ஜினியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
முன்னதாக 2022 டிசம்பரில், பிகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இதேபோல இடிந்து விழுந்தது.
அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் 2 மற்றும் 3 தூண்கள் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தேவர் மகன் சர்ச்சை: மாரி செல்வராஜ் விளக்கம்!
”கணவரின் சொத்துகளில் மனைவிக்கும் சம உரிமை உண்டு”: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!