கிச்சன் கீர்த்தனா: பிரெட் அவல் தோசை!

Published On:

| By Kavi

இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் அமர்ந்து சாப்பிடக்கூட  நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. இந்த சூழ்நிலையில் எளிதாகச் செய்யக்கூடிய அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்த பிரெட் அவல் தோசை அமையும். பிரெட்டில் உள்ள ஈஸ்ட் மிருதுத் தன்மையைக் கொடுக்கும். எளிதில் மென்று சாப்பிடக்கூடிய உணவு என்பதால், எளிதில் ஜீரணமாகும்.

என்ன தேவை?

பச்சரிசி – ஒரு கப்
புழுங்கல் அரிசி – அரை கப்
அவல் – கால் கப்
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
சால்ட் பிரெட் – 2 துண்டுகள்
தேங்காய்த் துருவல் – கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான  அளவு
எண்ணெய் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலைக் கழுவி தனியாக ஊற வைக்கவும்.

2 மணி நேரம் ஊறிய பிறகு அரிசிக்கலவையை கிரைண்டரில் போட்டு… அவல், தேங்காய்த் துருவல், ஓரங்கள் நீக்கிய பிரெட் துண்டுகள் ஆகியவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும்.

மாவு நன்கு புளித்த பிறகு, தோசைக்கல்லைக் காய வைத்து மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். காரச் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

அவரைக்காய் பிரியாணி!

பேபி பீட்சா தோசை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share