சென்னையில் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பொதுக் கூட்டத்தில் பாட்டில் வீசியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனாவை ஆதரித்து நேற்று நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் மீது பாட்டில்களை வீசியதாக சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்த ஆதவ் அர்ஜூனா, கண்ணாடி பாட்டிலை வைத்து அடிப்பதுதான் ஜனநாயகமா? என ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் தவெக கூட்டத்தில் பாட்டில் வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் பாட்டில்களை வீசியதாக இருவரும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
