கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக 3 ஆவது நாளாக இன்று (டிசம்பர் 17) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சினிமா பிரபலங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களில் இன்று 18ஆவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டார்க் நெட் வாயிலாக வெடி குண்டு மிரட்டல் விடுப்பதால் மின்னஞ்சல் வரும் ஐ.டியை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இதனால் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிய முடியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.
