நெல்லை கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பல நடிகை, நடிகர்களின் வீடுகள், பத்திரிகை அலுவலகங்கள், பத்திரிகையாளர்களின் வீடுகள், பள்ளிகள் என பரவலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று கூடங்குளம் அணு உலை ஒன்று மற்றும் இரண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபு வீடு, அமெரிக்க துணை தூதரகம்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை அடையாளம் தெரியாத நபா் ஒருவா் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். அதில் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு மற்றும் அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பேரில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் பிரபு வீட்டை சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
