திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு இன்று (டிசம்பர் 10) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் கோயில் நிர்வாகம் மரபுப்படியே தீபம் ஏற்றியது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தனியார் கல்லூரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் கல்லூரியிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
