தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர்-இந்தியா விமானம் AI 379, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. Bomb Threat Scare: Air India
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று ஜூன் 12-ந் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று ஜூன் 13-ந் தேதி டெல்லிக்கு 156 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் விமானத்தை விமானி தரை இறக்கினார்.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தகவல் வந்ததால் விமானம் தரை இறக்கப்பட்டது என்றனர். இதனடிப்படையில் விமானத்தில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததால் ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டது. இதனால் புக்கெட் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
