பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், நடித்த டான்சர் படம்தான் முதல் முதலில் ரூ.100 கோடியை வசூலித்த இந்திய படம் ஆகும்.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடித்த டிஸ்கோ டான்ஸர் படம் 1982-ஆம் ஆண்டு வெளியானது. பப்பார் சுபாஷ் இயக்கிய இந்த படத்தின் கதை ரொம்ப சாதாரணமானது. சாதாரண தெருபாடகன் டிஸ்கோ டான்சர் ஆவதுதான் கதை. பப்பிலஹிரி இசையில் பாடல்கள் செம ஹிட் அடித்தன. இதுதான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால், இந்தியாவில் இந்த படம் வெறும் 6 கோடிதான் வசூலித்தது. வெளிநாடுகளில்தான் வசூல் கொட்டியது. ரஷ்யாவில் டிஸ்கோ டான்சர் படம் சக்கை போடு போட்டது. வெளிநாடுகளில் 12 கோடி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. வெளிநாடுகளில் மட்டும் 94.28 கோடியை டிஸ்கோ டான்சர் படம் வசூலித்தது. அதாவது, மொத்த வசூல் 100.68 கோடி ஆகும்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”நடிகர் மிதுன் சக்கரவர்த்தி சினிமாவுலகுக்கு செய்த சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்த மிதுன் சக்கரவர்த்தி 1976 ஆம் ஆண்டு மிர்கயா படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 300 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். சிறிய அளவிலான பட்ஜெட் படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளித்தவர். சினிமாவை தவிர்த்து பல்வேறு சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். பல தென்னிந்திய கதாநாயகிகளை பாலிவுட்டில் அறிமுகம் செய்தவரும் இவர்தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விஜயகாந்த் வாழ்க்கை திரைப்படமாகிறதா? : பிரேமலதா பதில்!
தப்பித்த ராணிப்பேட்டை காந்தி… மிஸ் செய்த வசந்தம் கார்த்தி