வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்: பாபி சிம்ஹா

Published On:

| By Kavi

நடிகர் பாபிசிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வசந்த முல்லை’.

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார்.

நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘நேரம்’, ‘பிரேமம்’ படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். 

மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்றது.

இணையத்தில் படத்தின் கன்னட மொழி முன்னோட்டத்தை சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை சிரஞ்சீவியும் வெளியிட்டனர்.

தமிழ் மொழி முன்னோட்டம் சென்னை பிரசாத் பிரிவியு தியேட்டரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ராம் தல்லூரி பேசுகையில், ‘

‘ ரவி தேஜா உடனான படப்பிடிப்பில் தான் சிம்ஹாவை முதலில் சந்தித்தேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற திறமையாளர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல், மிக எளிமையாக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றினார்.

அவரை சந்தித்த உடனேயே, உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். சில மாதங்கள் கழித்து, என்னை தொடர்பு கொண்டு, ‘கதை ஒன்று இருக்கிறது. கேளுங்கள்’ என்றார்.

அடுத்த நாள் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு நடந்தது. அதன் போது இயக்குநர், சிம்ஹா, நான், என்னுடைய மகன் ஆகியோர் இருந்தோம். இயக்குநர் கதையை விவரித்துக் கொண்டே இருந்தார்.

இந்த கதையை கேட்ட முதல் பார்வையாளரான என்னுடைய மகன், கதையைக் கேட்டு விட்டு,’ இது ஆங்கில படம் போல் உலக தரத்தில் இருக்கிறது’ என்றார். ஏனெனில் இது புதுவித ஜானரிலான திரைப்படம்.

bobby simha Vasantha Mullai movie preview launch

இது போன்ற கதை சொல்லும் உத்தி இதற்கு முன் எந்தத் திரைப்படத்திலும் வரவில்லை. அந்தத் தருணத்திலேயே நான் ‘வசந்த முல்லை’ படத்தைத் தயாரிக்க தீர்மானித்து விட்டேன். இது கமர்சியலா..? கமர்சியல் இல்லாததா..? என்ற எல்லையை கடந்து, இது புது வித ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம். இது ரசிகர்களை கவரும்” என்றார்

இயக்குநர் ரமணன் புருஷோத்தமா பேசுகையில்,

”முகநூல் மூலமாக  சிம்ஹா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவரை சந்தித்தேன். ஏதாவது கதைகளை வைத்திருக்கிறீர்களா? நாம் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார்.

அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான், இன்று எனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் மேடை. ‘வசந்த முல்லை’ எனும் படத்தின் திரைக்கதையின் போக்கில் ஒரு திருப்புமுனைக்குப் பிறகு, இந்த கதை ஒரே இரவில் நடைபெறும். மலைபாங்கான பகுதி… இருட்டு… தொடர் மழை.. இந்த பின்னணியில் நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு வியப்பை அளித்தது.

அதிலும் குறிப்பாக நாயகி கஷ்மீரா பர்தேசி, அந்த குளிரில், ஒவ்வொரு காட்சியிலும் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து நடிக்க வேண்டியதிருந்தது. முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அளித்த நாயகி கஷ்மீரா பர்தேசிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் உயிர்நாடி இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசை தான்.

அவருக்கும் திரில்லர் ஜானரில் இசையமைப்பது முதல் முறை என்பதால், அனுபவித்து ஆத்மார்த்தமான உழைப்பை வழங்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், கலை இயக்குநர், படத் தொகுப்பாளர், சண்டை பயிற்சி, ஆடை வடிவமைப்பாளர், ‌விளம்பர வடிவமைப்பு, பாடலாசிரியர், ஒலி வடிவமைப்பாளர்,

கூடுதல் திரைக்கதையாசிரியர் பொன்னிவளவன், மக்கள் தொடர்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். பிடித்த விசயங்களை நேர்த்தியான படைப்பாக உருவாக்கி இருக்கிறோம்.

பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நாயகன் சிம்ஹா பேசுகையில்,

கடந்த ஆண்டு ‘மகான்’ திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன். 

பத்திரிக்கையாளர்களின் கரங்களின் மூலம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதை பெருமிதமாக கருதுகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

bobby simha Vasantha Mullai movie preview launch

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி  ஒன்றை அனுப்பினேன். உடனே வர சொல்லி, ‘வசந்த கோகிலா‘ எனும் இந்த படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார். 

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

‘டிஸ்கோ ராஜா’ எனும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ராம் தல்லூரி எனக்கு அறிமுகமானார். நட்புடன் பழகத் தொடங்கியவுடன், படங்களில் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். இணைந்து பணியாற்றலாம் என்று சம்மதம் தெரிவித்து, இயக்குநர் ஒருவரை தேர்வு செய்து படத்தின் பணிகளைத் தொடங்கினோம்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கதை முழுமையாகாததால், வேறு கதைகளை தேடத் தொடங்கினோம். நான் இயல்பாகவே வேகமாக முடிவெடுப்பேன். அந்தத் தருணத்தில் முகநூலில் குறும்படம் ஒன்றை பார்த்தேன். அருண் என்ற நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த குறும்படம் அது. நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.

அதன் இயக்குநரான ரமணன் புருஷோத்தமாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தித்தேன். அதன் பிறகு அவர் 2014ஆம் ஆண்டு முதல் எனக்காக ஒரு கதையினை தயார் செய்து, இணைந்து பணியாற்றலாமா..! என செய்தி அனுப்பியிருந்தது தெரிய வந்தது.

அவரிடம், ‘முதல் படைப்பாக இதனை உருவாக்க வேண்டும் என்றளவில் ஏதேனும் கதைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ஒரே ஒரு வாக்கியத்தில் ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக தயாரிப்பாளர் ராம் தல்லூரியைத் தொடர்பு கொண்டு கதையும், கதை சுருக்கத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே தருணத்தில் ரேஷ்மிக்கும் இந்த கதை பிடித்திருந்தது.

பின்னர் படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினோம். மிகவும் அழுத்தமான திரைக்கதை. படம் தொடங்கி 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு காட்சியை காணத் தவறினாலும், குழப்பம் ஏற்படலாம். ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ராம் தல்லூரி உதவியுடன் ஒரு வணிக ரீதியான திரைப்படத்தை வழங்கி இருக்க முடியும். ஆனால்  புதுமையான விசயத்தை நேர்த்தியாக சொல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் ‘வசந்த முல்லை’யை உருவாக்கி இருக்கிறோம்.

ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால், மூணாறு போன்ற மலை பிரதேசத்தில் நேரடியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பை நடத்தலாம் என திட்டமிட்டோம். ஆனால் காட்சிப்படி இரவு முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்க வேண்டும்.

இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அரங்கம் அமைத்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால்… அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இயலாத சூழல் உருவானது.

பிறகு மீண்டும் அரங்கத்தை மறுசீரமைப்பு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றம்: ஐந்து நீதிபதிகள் நியமனம்!

சேதமடைந்த பயிர்கள்: நிவாரணம் அறிவித்த முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share