கருங்கடல் ஒப்பந்தம்:  ரஷ்யா விலகல் – உணவு தானிய பஞ்சம் வருமா?

Published On:

| By christopher

Black Sea Grain Agreement

உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களைப் பெரிதும் நம்பியிருக்கின்ற நிலையில் இவற்றை எடுத்துச் செல்ல உதவும் கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்திருப்பது பயனாளி நாடுகள் அனைத்தையும் பெரிதும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

உலக அளவில் உணவு தானிய பஞ்சம் வருமா என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிகப் பெரிய உணவு நெருக்கடி உருவாகியது.

இதையடுத்து, கடந்த வருடம் ஜூலை மாதம், ஐநா மற்றும் துருக்கியின் முயற்சியால், ரஷ்யாவுடன் ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’ (Black Sea Grain Deal) என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதன்படி ஆயுதங்கள் ஏதும் இல்லையென பரிசோதித்து உறுதி செய்த பின் உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து தொடர்ந்து தானிய ஏற்றுமதி நடைபெறுவதற்கு ரஷ்யா சம்மதித்தது.

இந்த ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நேற்று அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய கடைசி நாள். ஆனால், இந்த முறை ரஷ்யா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.

அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.

ரஷ்யாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஓர் இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷ்யாவுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

தற்போது, “கருங்கடல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இனி இதற்கு ரஷ்யா ஒத்துழைக்காது.

ரஷ்யா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன், ரஷ்யாவும் கருங்கடல் ஒப்பந்தத்தில் மீண்டும் பங்கேற்கும்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

இதுவரை இந்த ஒப்பந்தம் மூலம் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து கடல் வழியாக சுமார் 32.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும். தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்திருப்பது பயனாளி நாடுகள் அனைத்தையும் பெரிதும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

உலக அளவில் உணவு தானிய பஞ்சம் வருமா என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மசாலா பூரி

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

சுதந்திர தினம்: தேசிய கொடி தயாரிப்பு பணிகள் தீவிரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share