கோவை மருதமலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கருஞ்சிறுத்தை குட்டி புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் யானை காட்டெருமை சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது.
இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் இன்று (டிசம்பர் 24) அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்து உள்ளது. அப்போது அங்கு யாரும் வசிக்காத வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை தனது குட்டியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டது.
இன்று காலையில் கருஞ்சிறுத்தை குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அங்கு கருஞ்சிறுத்தை குட்டி தனியாக இருப்பதை கண்டவர்கள் அருகில் உள்ள வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக அங்கு கூண்டுடன் விரைந்து வந்தனர். அப்போது அங்கு தனியாக திரிந்த குட்டியை மீட்டு கூண்டில் அடைத்தனர்.
அந்த கருஞ்சிறுத்தை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
