வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்ஸில் சபரீசன் நடத்திய சில சந்திப்புகள் பற்றிய புகைப்படங்கள் வந்து விழுந்தன. BJP’s Caste Combo Sabarisan Action Plan
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்யத் தொடங்கியது.
”சில மாதங்களாகவே திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன் சற்று ஒதுங்கி இருப்பதாகவும் அமைதியாக இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகத்தில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருவதை சமீப நாட்களாக அவர் மேற்கொண்டு வரும் சந்திப்புகள் உணர்த்துகின்றன.
ஜனவரி 10ஆம் தேதி மாலை முதலமைச்சரின் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் சபரீசனை கொங்கு பகுதியைச் சேர்ந்த வேட்டுவக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும் புதிய திராவிட கழக கட்சியின் தலைவருமான கே.எஸ். ராஜ் (கவுண்டர்)சென்று சந்தித்துள்ளார்.
அவரது கட்சியின் மாநாட்டை ஜனவரி 21ஆம் தேதி ஏற்பாடு செய்து அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அழைத்திருந்தார். இந்த

நிலையில் அதே 21ஆம் தேதி திமுகவின் இளைஞர் அணி மாநாடு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தங்களது மாநாட்டை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் சபரீசனை அவர் சந்தித்துள்ளார்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்த கையோடு வட இந்தியாவில் இந்துத்துவ உணர்வை ஓங்கச் செய்து உடனடியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது பாஜக. ஆனால் வட இந்தியாவில் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த இந்து எழுச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கொஞ்சமும் சாதகமாக இல்லை.
12ஆம் தேதி பாஜகவின் மையக் குழு கூட்டம் கமலாலயத்தில் நடைபெறும் நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பாஜகவின் மாநில நிர்வாகிகள், முன்னாள் மாநில தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கூட்டணி தொடர்பாக அவர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறார்.
அவரிடம் பேசிய பெரும்பாலான நிர்வாகிகளும் முன்னாள் மாநில தலைவர்களும்… இப்போதைய நிலையில் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி பலனளிக்க வேண்டுமானால், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்ற அடைமொழிக்கு ஆளாக்கிக் கொண்டு பாஜகவில் இருந்து வெகுதூரம் சென்றுகொண்டிருக்கிறார்.
அண்ணாமலையோ பாஜக தலைமையில் கூட்டணி என்ற வேறொரு ட்ராக்கில் சென்று கொண்டே இருக்கிறார். தமிழகம் முழுவதும் இருக்கும் சமுதாய அமைப்புகளை திரட்டி பாஜகவின் தலைமையிலான அணிக்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் அண்ணாமலை செய்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி திருச்சி வந்தபோது விமான நிலையத்தில் சந்தித்தவர்களில் முத்தரையர் சங்க பிரமுகரான செல்வகுமாரும் ஒருவர். இப்படி ஒவ்வொரு மாவட்டமாக சாதி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேடித் தேடி பாஜகவுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
இந்த நிலையில்தான் சபரீசன் இதை முறியடிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளார். இப்போதைய அரசியல் கூட்டணிகளில் தெளிவாக இருப்பது திமுக கூட்டணிதான். திமுக கூட்டணிக்குள் சிற்சில ஊடல்கள், உரசல்கள் இருந்தாலும் மக்களவைத் தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்பதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இந்த கூட்டணி பலத்தை விட திமுக கூட்டணிக்கு வேறு எந்தெந்த வகையிலெல்லாம் பலம் சேர்க்க முடியும் என்று விவாதித்து வருகிறார் சபரீசன். இந்த வகையில்தான் சபரீசனை சந்தித்துள்ளார் ராஜ்.

அமைச்சர் செந்தில்பாலாஜியால் சபரீசனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜ் . செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோதும் அவரது செல்வாக்கால், பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு உட்பட்ட சீர்மரபினர் நல வாரியத்தில் அரசு சாரா உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் ராஜ்.
இவர் ஏற்கனவே கொங்கு மண்டலத்திலும் கொங்கு மண்டலத்தைத் தாண்டியும் அரசியல் அங்கீகாரம் பெறாத சமூகங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார். பிப்ரவரியில் நடக்க இருக்கும் மாநாட்டிலும் அதை செய்ய இருக்கிறார். அப்படிப்பட்ட தமிழகம் முழுதிலும் இருக்கும் சமுதாய பிரமுகர்களை ஒருங்கிணைத்து அவர்களை திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வைக்கும் ஆக்ஷனில்தான் இப்போது சபரீசன் இறங்கியுள்ளார். ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதலியார் சமுதாயத்தினரை சந்தித்துப் பேசினார் சபரீசன். பிறகு திமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துகொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
சபரீசனின் மேற்பார்வையிலான ஏஜென்சி நடத்திய சர்வேயில் கொங்கு மண்டலத்தில் இன்னும் திமுக சற்று தளர்வாக உள்ளதாகவே தெரியவந்துள்ளது. அதிமுக தேஜகூவில் இருந்து விலகிவிட்ட நிலையில் மோடி எதிர்ப்பு மட்டுமே கொங்கு மண்டலத்தில் பலன் தராது என்று உணர்ந்திருக்கிற சபரீசன்…திமுக கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகளைத் தாண்டி இப்படிப்பட்ட சமுதாய இயக்கங்கள் ஒன்றையும் மிஸ் செய்துவிடக் கூடாது என்ற முனைப்பில் இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோயம்பேடா..? கிளாம்பாக்கமா..? ஊரா..?: அப்டேட் குமாரு
துணை முதல்வர் பதவி : உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
BJP’s Caste Combo Sabarisan Action Plan
