அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து அக்கட்சியையே அழிப்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்று திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். Anwar Raja DMK AIADMK
அதிமுவின் அமைப்பு செயலாளராக இருந்த அன்வர் ராஜா இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இதைத்தொ டர்ந்து பாஜக – அதிமுக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவை அழிப்பதே பிஜேபியின் அஜெண்டா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அன்வர் ராஜா கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கருத்தியல் ரீதியாக நாங்கள் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலும் அதற்குப் பிறகு வந்த தலைவர்கள் தலைமையிலும் வாழ்ந்தவர்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து நான் அரசியலில் இருக்கிறேன். அதற்கு புறம்பாக இப்போது அதிமுக இருக்கிறது. அதிமுக தனது கொள்கையிலிருந்து தடம் புரண்டு இப்போது பிஜேபியின் கையில் சிக்கி இருக்கிறது. கூட்டணி எல்லாம் ஒன்றும் இல்லை. அமித்ஷா தெளிவாக என்டிஏ (NDA) கூட்டணி ஆட்சிதான்… அதில் பிஜேபியும் இடம்பெறும் என்று சொல்லிவிட்டார். அமித்ஷா மூன்று முறை பேட்டி தந்த நிலையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று குறிப்பிடவில்லை.

எடப்பாடிதான் சொல்கிறார்
எடப்பாடி பழனிசாமி 12 நாட்களாக தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தவே அவரால் இயலவில்லை. அதிமுக வெற்றி பெற்றால் நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அவரால் சொல்ல இயலவில்லை. அந்த அளவிற்கு தான் அவரது நிலைமை உள்ளது. அதையே அவரால் இன்னும் உறுதிப்படுத்த இயலவில்லை.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள போரை நான் தான் நிறுத்தினேன் என்று 20 முறையாவது டிரம்ப் சொல்லி இருப்பார். யாரும் கேட்டார்களா? அதேபோல் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நான்தான் முதலமைச்சர்; நான் தான் முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
பாஜவின் அஜெண்டா
அதிமுகவை சீரழிப்பதற்கு தான் பாஜக கூட்டணியில் சேர்கிறது என்று இந்த கூட்டணியை பற்றி நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். இதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
மம்தா பானர்ஜியை விட ஒரு போல்டான தலைவர் இந்த இந்திய துணைக் கண்டத்தில் இல்லை. மம்தா பானர்ஜி கட்சியையே இவர்கள் உடைத்து சிதைத்து அங்கு இரண்டாம் கட்ட தலைவராக இருந்த சுவேந்து அதிகாரியை அதிலிருந்து பிரித்து மம்தா பானர்ஜிக்கு எதிராகவே நிற்க வைத்தார்கள். மம்தாவை கடந்த தேர்தலில் தோற்கடித்தார்கள். ஆனால் அவரது கட்சி வெற்றி பெற்றதால் அவர் முதலமைச்சராக வந்தார். பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேபோல் தான் தேவகவுடாவின் மகன் குமாரசாமி பிஜேபியுடன் கூட்டணியில் இருந்தார். குமாரசாமி இப்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.
மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்ரே. அவர் என்ன ஆனார். அவரது ஆட்சி என்ன ஆனது. அந்தக் கட்சியை அழித்துவிட்டார்கள். அதைப்போல எந்த கட்சியில் அவர்கள் சேர்ந்தாலும் அந்தக் கட்சியை அழிப்பது தான் அவர்களது நோக்கம். இப்போது அதிமுகவை அழித்துவிட்டு பின்னர் திமுகவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்பதுதான் அவர்களது அஜெண்டா. அந்த அஜெண்டாவை தான் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இடத்தில் கூட நம்முடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று குறிப்பிடவில்லை. என்டிஏ (NDA) கூட்டணி ஆட்சி நடக்கும்.. என்டிஏ (NDA) கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.. அந்தக் ஆட்சியில் பிஜேபியும் இடம்பெறும் என்று தான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதை நேற்றைய தினம் கேட்டபோது எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஏமாளி அல்ல என்கிறார். இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பிஜேபியை பொறுத்தவரை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதனால் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டுமே என்று என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அதையெல்லாம் அவர்கள் கேட்பதற்கு தயாராக இல்லை. எனவே தான் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தேன்” என்றார்.
