டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம்பெற்ற கோவிந்தா பாடல் சர்ச்சையாகியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. bjp send notice to santhanam and demand 100 cr
நடிகர் சந்தானம் நடித்த ‘DD நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கீத்திகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘கோவிந்தா’ என்ற பாடல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் தான் புகார் அளித்திருக்கிறார்கள்.
அவரிடம், “நீங்கள் தமிழ்நாட்டில் பேசி அந்த படத்தை தடை செய்யவோ, பாடலை நீக்கவோ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். மேலும் சந்தானம் மீது திருமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை நடந்த பட ப்ரொமோசன் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானம், “நான் கடவுள் நம்பிக்கை உடையவன். பெருமாளை அவமதிக்கும் வகையில் எந்த காட்சியையும் என்னுடைய படத்தில் வைக்க மாட்டேன்” எனக் கூறினார்.

இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .
அதில், ‘DD நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்ற ‘கோவிந்தா’ என்ற பாடலை நீக்க வேண்டும் என்றும், இந்து மதத்தை அவமதித்ததற்காக ரூ.100 கோடி மானநஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கும், பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ஏழுமலையான் திருநாமங்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் உள்ளது என்றும், அப்படத்தை தயாரித்த நிகாரிகா என்டர்பிரைசஸ் நிறுவனம் 15 நாட்களில் மன்னிப்பு கேட்காவிடில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பானு பிரகாஷ் ரெட்டி எச்சரித்துள்ளார்.
