கோவையில் விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் நேற்று இரவு முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை அந்த இளைஞரை தாக்கி விட்டு அந்த மாணவியை அங்கிருந்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பாஜக மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் தீ பந்தங்களை ஏந்தியும், கண்டன பதாகைகளை ஏந்தியும் பெண்கள் கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பாக நடமாட வேண்டுமென்றால் பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தீப்பந்தத்தை ஏந்தியும் பெப்பர் ஸ்ப்ரே வைத்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொள்ள சட்டம் வேண்டும், திமுக அரசு பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது கோவைக்கு ஏற்பட்ட அவமானம் என்பதை தாண்டி, காவல்துறை நடவடிக்கை உடனே எடுத்திருக்க வேண்டும். அங்கு சட்ட விரோதமாக மதுபான பார் கடை இயங்கி வந்துள்ளது. இதை காவல்துறை கண்டு கொள்ளாதது அலட்சியத்தை காட்டுவதாக கூறினார்.
நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டம் நடத்த உள்ளோம். மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகும் விஷயம் நடந்தால் காவல்துறை என்கவுண்டர் என முடித்து விடுகிறார்கள். நாங்கள் எதிர்பார்ப்பது என்கவுண்டர் என்று மூடிவிடுவதால் தான். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் குற்றத்தை தடுப்பதும் கடும் நடவடிக்கை எடுப்பதும் தான் தீர்வு என்றார்.
காவல்துறையின் ரோந்து பணிகள் செயல்பாடு மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை என்றார். குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இரண்டு இளைஞர்கள் யார்?? அவர்களின் பெயரை செய்தி குறிப்பில் ஏன் போடவில்லை என்றார். மேலும் துணைக் குடியரசுத் தலைவர் வரும்பொழுது சட்டத்தில் இருக்கும் படி பாதுகாப்பு கொடுத்தாலே போதும் என்றார்.
டேட்டிங் செயலி மோசடி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை வேண்டும் என்றும் அந்த செயலி குறித்து மத்திய அரசிடம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெண்கள் மீது வன்கொடுமை அதிகரித்துள்ளது என்று கூறிய அவர் ஆட்சியாளர்களுக்கு டிராமா செய்ய நேரம் உள்ளது. குடும்பத்தை பார்க்க நேரம் உள்ளது ஆனால் பெண்களை பார்க்க நேரம் இல்லை, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள் என்றார்.
இருக்கும் நான்கு மாதத்திற்காவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
