மதுவை விற்று சம்பாதிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்!

Published On:

| By Jegadeesh

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக இன்று(மே20) போராட்டம் நடத்தி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச் சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகி பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கள்ளச்சாராயம் அருந்தியதில் 22 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் மற்றும் டாஸ்மாக் மதுபான விற்பனை கட்டுப்பாடின்றி நடப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்தந்த மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மது என்பது நம்முடைய வாழ்க்கையில் எல்லா பக்கங்களிலும் சூழ ஆரம்பித்து இருக்கிறது.

கடந்த வருடத்தில் டாஸ்மாக்கின் மொத்த வருமானம் 44 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவிலேயே மதுவை அதிகம் விற்று சம்பாதித்த அரசு திமுக அரசு. 2021-2022 ஆண்டை விட 2022-2023 ஆண்டில் டாஸ்மாக்கின் வருமானம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

36 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் திமுக அரசு ஆட்சியேற்ற ஒரே வருடத்தில் 44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு இந்தியாவில் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 9 விழுக்காடு மக்கள் குடிக்கு அடிமையாகியுள்ளனர். படிப்படியாக இது உயர்ந்துள்ளது என்றார்.

மேலும், பாஜகவின் மகளிர் நிர்வாகிகள் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளனர்.

டாஸ்மாக்கை அடுத்த மூன்று வருடங்களில் எப்படி மூடுவது…அதை மூடினால் அதில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாய் பற்றாக் குறையை எப்படி ஈடு செய்வது என்ற யோசனையை தமிழக பாஜக முதல்வருக்கு வெள்ளை அறிக்கையாக கொடுக்கும். தமிழகத்தில் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டிய காலக்கட்டம் வந்து விட்டது என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஐபிஎல்: ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை!

விமர்சனம்: பிச்சைக்காரன் 2

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share