பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் பாஜக சார்பில் இன்று (ஜனவரி 8) பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆடல் பாடல் உடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளிலும் குஷ்பு பங்கேற்றார். பின்னர் ரேக்ளா பந்தயத்தைத் தொடங்கி வைத்து சிறிது தூரம் ரேக்ளா வண்டியிலும் பயணித்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
இந்த கொண்டாட்டங்களைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டில் சந்தோஷம் கொடுக்கக் கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாகக் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ. 1000 மட்டும் கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறி வரும் திராவிட அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது. சுயமரியாதை ஆட்சி என்று கூறும் திமுக அரசு ஒரு கரும்பு கொடுக்கிறது. இதனைச் சுயமரியாதையுடன் வாழும் தமிழர்கள் வேண்டாம் என்றே கூறுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த குஷ்பு,
“பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பாஜகவில் எல்லா பெண்களும் கட்சியை விட்டுப் போகவில்லை. ஒரு சிலர் கட்சியை விட்டுப் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. நானும் கட்சியில் தான் இருக்கிறேன். திமுகவினர் என்னைப் பற்றி தவறாகப் பேசிய போது பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தற்போது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாகப் பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு என்பதைத் தமிழகம், தமிழ்நாடு என்று அழைக்கலாம். ஆனால் எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் தான். நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தான் உள்ளேன்” என்று பேசினார் குஷ்பு.
மோனிஷா
கோவை பல்லடம் இணைப்பு சாலை: புதிய பெயர் சூட்டிய முதல்வர்!
டிஜிட்டல் திண்ணை: தலைவர் பஞ்சம்… ஸ்டாலினை தாக்குகிறாரா திருமா?
Comments are closed.