எங்களுக்கு பாஜக உரிய மரியாதையை தருகிறது, நாங்களும் அவர்களுக்கு உரிய மரியாதையை தந்து கொண்டுதான் இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் பன்னீர்செல்வம் இன்று(டிசம்பர் 21)மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவில் இப்பொழுது நிலவக்கூடிய இந்த சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தமிழகமக்களும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் நன்றாக அறிவார்கள்.
அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்க கூடிய முயற்சியில் இன்று ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள்பக்கம் தான் இருக்கிறார்கள்.
நான் பொருளாளராக இருக்கும்பொழுது அளித்த கணக்கைதான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி, ஆகவேதான் எங்கள் தலைமையில் கூட்டணி அமையும் என்று நான் பேசி இருக்கிறேன்.
தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்குகின்ற தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.
இவரால் மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு தற்போது 88 மாவட்ட செயலாளர்களையும், கழக நிர்வாகிகளையும் நியமித்து உள்ளேன்.
போட்டி பொதுக்குழு என்று எதுவும் இல்லை. பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு அவர்கள் செய்யும் தவறை ஒவ்வொரு நாளும் சுட்டி காட்டும் ஒரே இயக்கம் அதிமுக. அதை நான் முறையாக செய்து கொண்டு இருக்கிறேன்.

கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் நம்பிக்கை அதிமுக 1.5கோடி தொண்டர்கள் தான். அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது அது எங்களுக்குதான் சொந்தம்” என்றார்.
அடுத்த கட்ட நகர்வை பற்றிய கேள்விக்கு, மிகவும் அவசரம் தேவையில்லை என்றும் இறுதிகட்ட வெற்றி எங்களுடையதுதான் என்றும் பதிலளித்தார்.
சசிகலாவுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இயக்கத்தை காப்பாற்றியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து செயல்படுவோம்.
ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும். இணையக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர் எடப்பாடி மட்டும்தான் என்றார்.
அதிமுகவை பாஜக விழுங்குகிறது என்ற கேள்விக்கு, யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது
எனக்கு குஜராத்தில் உரிய மரியாதை தரப்பட்டது. முதலில் நான் பின் வரிசையில் அமர்ந்திருந்தேன்.பிறகு மேடையில் முன் வரிசையில் என்னை அழைத்து சென்று அமர வைத்தார்கள். அமித்ஷா where is OPS என்று கேட்டார். பின்பு தான் நான் சென்று அவரை பார்த்து பேசினேன்
எங்களுக்கு பாஜக உரிய மரியாதையை தருகிறது. நாங்களும் அவர்களுக்கு உரிய மரியாதையை தந்து கொண்டு தான் இருக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் G20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கலை.ரா
முகக்கவசம் கட்டாயம்:டெல்லியில் அவசர ஆலோசனை!
”கொரோனா நெறிமுறைகளை பிரதமர் பின்பற்றினாரா?”–காங்கிரஸ் பதிலடி!

Comments are closed.