மது போதையில் பணியில் இருந்த போலீசை தாக்க முயன்ற திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட பிரச்சார அணி செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மங்கலம் சாலை எஸ் ஆர் நகர் பகுதியைசேர்ந்தவர் செல்வம். இவர் பாஜக வடக்கு மாவட்ட பிரச்சார அணி செயலாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிலிருந்து நடந்து சென்று மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற செல்வம் மது போதையில் தனக்கு தெரிந்தவர்கள் இவர்களை விடுங்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வாகன தணிக்கையின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மட்டை எடுத்து அங்கு பணியில் இருந்த கருப்பையா என்ற காவலரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். அருகில் இருந்த மற்ற போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த ஹெல்மட்டை கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவுயது.
பின்னர் செல்வத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கருப்பையா அளித்த புகாரின் பேரில் பணியில் இருந்த போலீசை பணி செய்ய விடாமல் தடுத்த செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்து திருப்பூர் மத்திய போலீசார் நேற்று அவரை கைது செய்துள்ளனர்.
