சிவகங்கையில் பாஜக நகர வர்த்தகப் பிரிவுத் தலைவர் சதீஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகரில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ். இவர் பாஜக நகர வர்த்தகப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மேலும், வாரச் சந்தை அருகே இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு, அடையாளம் தெரியாத நபர்களால் சதீஷ் கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை நகர காவல்துறையினர், அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஐந்து பேரை தேடி வருகின்றனர். இந்தப் படுகொலைச் சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம், “திமுக அரசின் நிர்வாகத் தோல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக, யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதே சிவகங்கையில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட பின்னரும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் விளைவுகளை திமுக அரசு உணரவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
