திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் தற்போதைய நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா கடந்த செப்டம்பர் 6ம் தேதி திராவிடர் கழக கூட்டத்தில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசிய பேச்சுக்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தில் இருப்பதைத்தான் நான் பேசினேன் என ராசா இதற்கு விளக்கம் அளித்ததோடு மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.
நேற்று ராசாவைக் கண்டித்து கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில்… நீலகிரி மக்களவை உறுப்பினரான ராசா இன்று (செப்டம்பர் 27)கோவை வழியாக நீலகிரிக்கு செல்கிறார்.
கோவை விமான நிலையத்திலிருந்து நீலகிரி செல்லும் வரை ஆ ராசாவை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவிக்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது.
பாஜகவின் மாநில விவசாய பிரிவு செயலாளரான ஜிகே நாகராஜ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,
“எனதருமை தமிழ் சொந்தங்களே வணக்கம்!
இந்து மக்களை இழிவுபடுத்திய ராசா, நீலகிரி செல்வதற்காக இன்று (27.09.2022) செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி அளவில் கோவை விமான நிலையம் வருகிறார்.
கோவை விமான நிலையத்திலிருந்து அன்னூர் வழியாக நீலகிரி செல்லும் ராசாவுக்கு அறவழியில் கடும் எதிர்ப்பை தெரிவித்து தக்க பாடம் புகட்ட வேண்டியது நமது அனைவரின் தலையாய கடமை.
இது பாஜகவினருக்கான போராட்டம் மட்டுமல்ல,ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்களுக்கான போராட்டமாகும்.
பங்கெடுப்போம்! தக்க பாடம் புகட்டுவோம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அற வழியில் போராட்டம் என்று அழைப்பு விடுத்திருந்தாலும் மதுரையில் அமைச்சர் பி டி ஆர் கார் மீது செருப்பு வீசியதை போல ஆ ராசா மீதும் தாக்குதல் நடத்த பாஜகவினர் ஒரு திட்டம் வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள்.
அதேசமயத்தில் ஆ.ராசாவுக்கு வரவேற்பு அளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.
வேந்தன்
Comments are closed.