அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் இன்று (நவம்பர் 1) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையம் ஜங்ஷன் அருகே ஏற்கனவே பாஜக கொடிக் கம்பம் இருந்தது. இந்நிலையில் அந்த கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கொடிக்கம்பத்தை பாஜகவினர் அமைத்திருந்தனர்.
புதிதாக அமைக்கப்பட்ட அந்த கொடிக் கம்பத்தில் இன்று கொடி ஏற்றுவதற்காக மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். ஆனால் கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அதற்கு பாஜகவினர், புதிதாக கொடிக்கம்பம் அமைக்கவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தான் கொடி ஏற்றுகிறோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கடந்த 20 ஆம் தேதி இரவு பாஜகவினர் நட்ட கொடிக்கம்பத்தை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து ஜேசிபி வாகனம் மூலம் அகற்றியது.
அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை நவம்பர் 1 ஆம் தேதி (இன்று) முதல் அடுத்த 100 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 100 கொடிக்கம்பங்கள் நடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி புதிதாக கொடிக்கம்பம் நடுகிறார்களா என்று காவல்துறை கண்காணித்து வருகிறது.
அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நட்டால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இன்று கோவையில் புதிதாக நட்ட கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா